அம்பாந்தோட்டைச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களை விட முற்றிலும் மாறுபட்டது!

240 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-19அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினரைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனினும் இவ்வாறான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்போது வேறுவிதமாகவே அது கையாளப்படுகிறது. கடற்படையைச் சேர்ந்த இருவரை அங்குள்ளவர்கள் தடுத்துவைத்திருந்தபோதும், காவல்துறையினர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும் அவர்களை மீட்பதற்கு கடற்படை அனுப்பப்படவில்லை என முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த செயலமர்வு இன்று பந்தரமுல்லையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நடைபெறும் ஆட்சி முறை பற்றி அனைவருக்கும் தெரியும். நாட்டில் தற்போது ஸ்திரத்தன்மை இல்லை. அவ்வாறான காலகட்டத்திலேயே நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம். நாட்டில் தற்போது காவல்துறை ஆட்சியே நடைபெறுகின்றது. ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் தேர்தலை பிற்போடுகின்றனர்.

கடத்த கால மோசடிகள் தொடர்பாகப் பேசிக்கொண்டு மக்களின் கோடிக்கணக்கான பணத்தினைக் கொள்ளையடிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலை அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் உள்ள தொழில்வாய்ப்புகளையும் இல்லாமலாக்குகிறது.

தொடர்ச்சியாக தொழிலாளர்களின் உரிமைகளை நீக்கிக்கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு போராடும்போது அதற்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் வழங்காது கடற்படையினர் மூலம் கட்டுப்படுத்துகின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பபட்ட தாக்குதலை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. இதற்கு முன்னர்  இவ்வாறு கடற்படையினரைக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்திய சந்தர்ப்பங்கள் பதிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.