ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் (காணொளி)

307 0

sivasakkthiஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.பொது மக்களுக்கு சொந்தமான ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், பதிலீடாக வேறு 6 ஏக்கர் காணி இராணுவத்திற்கு வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஓமந்தைச் சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுக்கும், மேலதிக அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடிய பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த 06 ஏக்கர் காணியை எடுத்து விட்டு, மிகுதி காணியை விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மக்களிடம் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த மக்கள் அப்பகுதியில் சுமார் 65 குடும்பங்களுக்கு சொந்தமான காணி உள்ளதாகவும், கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினர் அதனை தம்வசப்படுத்தி வைத்திருப்பதாகவும், எல்லோரது காணியும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்எனவும் கோரியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி காணி உரிமையாளர்கள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா ஆகியோரது கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்ததையடுத்து, மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர்கள் அப்பகுதி மக்களுடனும், மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இதன்போதே, ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.