அம்பாறை -கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் அபகரிப்பு

286 0

unnamed51அம்பாறை  கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க ஈடுபட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த 7 ஏக்கர் காணியில்இ கடந்த சில நாட்களாக  சிரமதான பணிகளில் ஈடுபட்டுள்ள கஞ்சிகுடிச்சாறு இராணுவத்தினர், அங்கு எல்லைகளை நிறுவியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  தெரிவித்தார்

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் மாத்திரமன்றி, யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்திருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் இராணுவத்தினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் கடந்த மாதம் 27 ஆம் திகதி இராணுவத்தினர் நிலைகொள்ளாத மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு, யுத்ததிற்கு பின்னர் முதல்முறையாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டிருந்தது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ள பின்னணியிலேயே தற்போது கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தை கையக்கப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் எதற்காக தமிழ் பிரதேச்ஙகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தவராசா கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவைளை, விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீர்த்த உறவுகளை   நினைவுகூரலாம் என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ள இந்த சூழலில்  மாவீர் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது என  மட்டக்களப்பு மாவட்ட  வலுவிழந்தோர்  சங்கத்தின் செயலாளர்  எஸ்.  பிரபா தெரிவித்துள்ளார்.