10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

187 0

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? என்பதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டி.என்.பாளையம் வனப்பகுதி கிராமம் விளாங்கோம்பை பகுதியில் பள்ளிக்கூடங்களை திறப்பதில் சிரமம் உள்ளது. வனத்துறை ஒத்துழைப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்பட உள்ளது. விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் மலைக்கிராம பகுதியில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலை பொறுத்தவரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு பின்பு தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் நினைத்து கல்வி கற்று கொடுக்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.

தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை. பிளஸ்-2 தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது பற்றி நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படும். ஒரு அறைக்கு 25 பேர் இருக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

எப்போதும் அரசு பள்ளிக்கூடங்களுக்கு 98 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்