சிவனொளிபாதமலையில் காணாமற்போன ஐவர் மீட்பு

279 0

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சிவனொளிபாதமலையின், ஹெமில்டன் வனப்பகுதியில் காணாமற்போன ஐந்து பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி பொலிஸாரும் விஷேட அதிரடைப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (12) இவர்கள் ஹெமில்டன் வனப்பகுதிக்குள் பிரவேசித்திருந்த நிலையில் அன்றைய தினம் இரவு முதல் காணாமால் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாம் வழிதவறி இருப்பதாக இவர்கள் பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைக்கு தரைப்படை மற்றும் விமானப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 412 ரக விமானம் மூலம் காணாமல் போனவர்கள் இருந்த இடத்தை நேற்று மாலை அடையாளம் கண்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன கூறினார்.எவ்வாறாயினும் விமானப் படையினரால் அவர்கள் ஐவரும் இருந்த இடத்தை நெருங்க முடியாததன் காரணமாக, அவர்கள் இருந்த இடத்தை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் இராணுப் படையினருக்கும் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.