ஆம்பூர் தொகுதியில் போட்டி?- எல்.கே.சுதீஷ் சூசக

304 0

ஆம்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தேசிய முற்போக்கு திராவிடர் கழக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தேமுதிக புதிய உத்வேகத்துடன் காத்திருக்கிறது. தமிழக சட்ட பேரவை தொகுதிகள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்திற்கு நான் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

ராணிப்பேட்டைக்கு அடுத்தபடியாக ஆம்பூரில் தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 32 சட்டப்பேரவை தொகுதி உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் கடந்த 2011-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 7 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம். அதேபோல, வரும் தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 2006-ல் நடைபெற்ற தேர்தலில் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் நான் போட்டியிட்டேன். வேலூர் எனது சொந்த மாவட்டம் என்பதால் எப்போதும் வேலூர் மாவட்டம் மீது எனக்கு நிறைய பாசம் உண்டு. கட்சித் தலைவர் விஜயகாந்த் விருப்பபடி கடந்த மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டேன்.

தலைவர் மற்றும் தொண்டர்கள் விருப்பப்படி வாய்ப்பு கிடைத்தால் அடுத்த 5 ஆண்டுகள் ஆம்பூரில் என்னை நீங்கள் பார்க்கலாம். ஆம்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறேன். அதிமுக தொடர்ந்து தேமுதிக உடன் இருந்து வருகிறது. கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை அறிவிக்கும்’’ என்றார்.