படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டு.வில் அனுஷ்டிப்பு

234 0

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும் என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னைனியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி. இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.