அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க சோதனை நடத்தவில்லை என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் நேற்று வருமான வரி துறையினர் சில இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனை நடவடிக்கை அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க நடத்தப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இதை பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் மறுத்து உள்ளார்.
நெருக்கடி கொடுக்கும் அரசியலை பா.ஜனதா ஒரு போதும் நடத்தாது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் ஒரு பகுதிதான் இந்த சோதனை. எங்கெல்லாம் கருப்பு பண நடமாட்டம் பற்றிய சந்தேகங்கள் வருகிறதோ அங்கு அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமானதான். இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறானது.
அதிகாரிகள் சந்தேகப்பட்டது போலவே பல கோடி ரூபாய் பணமும், தங்கமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. அரசியல் ரீதியாக நடந்தால் இப்படியாக இருக்கும்?
தமிழ்நாட்டில் பா.ஜனதா காலுன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது உண்மைதான். எல்லா கட்சிகளுமே தங்களை வலுப்படுத்தி கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் முயற்சி எடுப்பது வழக்கமானதுதான்.
எங்களை பொருத்தவரை இன்னொரு கட்சியை மிரட்டியோ, எதிர்மறை அரசியல் நடத்தியோ எங்களுக்கான இடத்தை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஜனநாயக முறைப்படி மத்திய அரசு மாநில அரசுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அதைதான் பிரதமர் மோடி செய்தார்.
இதற்காக கூண்டோடு அ.தி.மு.க.வை கொண்டு செல்ல போகிறார்கள் என்பது அப்பட்டமான கற்பனை. அரசியல் ரீதியாக எதையும் சந்திக்கும் தைரியம் பா.ஜனதாவுக்கு உண்டு.முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். எந்த குழப்பமும் இல்லாமல் தங்கள் மனம் கவர்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைபோல் அரசியலிலும் எந்தவிதமான குழப்பமும் ஏற்படக் கூடாது என்பதுதான் பா.ஜனதாவின் எண்ணம்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருப்பது நியமானதானதுதான்.காலம் காலமாக பல தலைவர்கள் மறைந்த போதும் இதே போன்ற கோரிக்கை எழுப்பப்பட்டு அவர்களது வீடுகளும் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டது கடந்த கால வரலாறு. அதை போல் இப்போது அந்த கட்சி தொண்டர்களும் கோரிக்கை விடுத்து இருப்பது நியமானதே.இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.