மோசடியில் ஈடுபட்டவர்கள் என என்னால் கலைக்கப்பட்டவர்கள் கோத்தாவுடன் – சரத் பொன்சேகா!

344 0

sarath-fonsekaமோசடியில் ஈடுபட்டார்கள் எனத் தம்மால் இராணுவத்திலிருந்து துரத்தப்பட்ட சிறீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியமையாலேயே நாடு என்ற அங்கீகாரம் எமக்கு அனைத்துலகரீதியில் கிடைத்துள்ளது.

பாதுகாப்பின்றி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையோ அல்லது நாட்டை முன்னேற்றுவதற்கான எந்தச் செயற்பாட்டையும் மேற்கொள்ளமுடியாது.

நாட்டின் பாதுகாப்புக்கு உள்ளக ரீதியாகவும், அனைத்துலக ரீதியிலும் அச்சுறுத்தல் ஏற்படலாம். உள்ளக அச்சுறுத்தலில் எமக்கு அனுபவம் உண்டு. அதனைத் தடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொறுப்பு முப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் உண்டு எனத் தெரிவித்தார்.

நான் முப்படைகளின் தளபதியாக பொறுப்பேற்றபோது இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சில அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை நீக்கி திறமைவாய்ந்த அதிகாரிகளை நியமித்தேன். அவர்கள் கோத்தபாய ராஜபக்ஷவினால் பல்வேறு தேவைக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

அனைத்துலக சட்டங்கள் மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமையவே நான் போரை முன்னெடுத்தேன். இராணுவத்தினருக்கு எதிரான சவால்களுக்குப் பொறுப்புக்கூற நான் தயாராகவே இருக்கின்றேன்.

எனினும், கோத்தாபயவின் எண்ணங்களை நிறைவேற்றச் சென்று சட்டத்தை மீறிச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பாக என்னால் பொறுப்புக்கூற முடியாது. அதற்கான பொறுப்பை கோத்தபாய ராஜபக்‌சவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்குக் கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் பேணப்படவேண்டும். அதேநேரம் வடக்குக் கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே மீளக் கையளிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போரில் முக்கிய பங்காற்றிய இராணுவம் தற்போது நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்யெழுப்ப பங்களிப்புச் செய்யவேண்டுமெனத் தெரிவித்தார்.