வெடிபொருட்கள் அகற்றம் 25 ஆயிரத்தை எட்டுகிறது

192 0

முல்லைத்தீவு – அம்பகாமம் மற்றும் தச்சடம்பன், கிளிநொச்சி – முகமாலை மற்றும் ஆனையிறவு ஆகிய பிரதேசங்களில் கடந்த 4 ஆண்டுகளில் வெடிபொருட்கள் அகற்றம் 25 ஆயிரத்தை எட்டுகிறது.

இதன்படி, இவ்விரு மாவட்டங்களினதும் 1,536,965 சதுரமீற்றர் பரப்பளவில் 24,893 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

வட பகுதியில் மனிதாபிமான கண்ணி வெடி அகற்றலில் ஈடுபடும் ஸார்ப் நிறுவனம், நேற்று (08) இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மனிதாபிமானக் கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற ஸார்ப் நிறுவனம், ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன், 2016 நவம்பர் மாதம் தொடக்கம் 2020 டிசெம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்படி கண்ணி வெடிகளை அகற்றியுள்ளதாக, அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணி வெடி அகற்றும் பணிகளை முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதிகளில் துரித கதியில் முன்னெடுத்து வருவதாக, ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.