வட மாகாணத்தில் 84 கொரோனா தொற்றாளர்கள்

202 0

வட மாகாணத்தில் 84 கொரோனா தொற்றாளர்கள் மட்டுமே, கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மார்ச் முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபரில் 39 பேரும் நவம்பரில் 27 பேரும் டிசெம்பரில் இன்றுவரை ஒருவர் என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிக்கையொன்று வெளியி டப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13 பேரும் யாழ்ப்பாணத்தில் இருந்து எட்டுப் பேரும் மன்னாரில் இருந்து நால்வரும் முல்லைத்தீவில் இருந்து இருவரும் என மொத்தம்

27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் ஒக்டோபரில் ஏழாயிரத்து 124 பி.சி.ஆர். பரிசோதனைகளும் நவம்பரில் எட்டாயிரத்து 69 பி.சி.ஆர். பரிசோதனைகளும் கொழும்பு அநுராதபுரம் ஆய்வுகூடத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

மேலும், வடமாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மருதங்கேணி வைத்தியசாலை, கோப்பாய் கல்வியற் கல்லூரி மற்றும் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மாகாண தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியன இயங்கி வருகின்றன.

இதில், மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் தற்போது

50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.