முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்- இம்ரான் மஹ்ரூப்

258 0

இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இதில் 18 ஆம் 19 ஆம் 20 ஆம் திருத்த சட்டம் என மூன்றுக்கும் அதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்த சட்டமூலங்களில் என்ன உள்ளது என்றாவது தெரியுமா என எனக்கு தெரியவில்லை.

இவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை எடுத்து பார்த்தால் முழுவதும் இனவாதம் பேசியே வாக்கு சேகரித்தனர்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்தால் இலங்கை மியன்மாரை போன்று மாறும் என கூறினர். இன்று எந்த முகத்தை கொண்டு மீண்டும் மக்கள் முன் செல்வார்கள்.

இவர்கள் இந்த அரசுக்கு வழங்கிய இந்த அதிகாரம் மூலம் விசேடமாக கிழக்கில் தொல்பொருள் செயலணி போன்று பல வழிகளில் பறிபோகவுள்ள எமது காணிகளுக்கும் சிங்கள குடியேற்றங்களுக்கும் எமது உரிமைகளுக்கும் என்ன தீர்வை வழங்கப்போகிறார்கள்” என நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.