ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை, இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி ஆங்கில இணையமான தமிழ் நெட் இன் பிரதம ஆசிரியரும், தராகி சிவராமின் நெருங்கிய சகாவுமான ஜெயச்சந்திரன் இந்தத் தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர் தனது சிபார்சை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில், வழமையான அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் ஊடாக தராகி சிவராம் படுகொலை அரங்கேற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வன்னியில் விடுதலைப் புலிகள் தலைமையுடனான சந்திப்பொன்றின்போது, சான்றுகளினதும் அரச புலனாய்வுக் கட்டமைப்புக்களது உள்ளக முகவர்களது தகவல்களின் அடிப்படையிலும் இதனை உறுதிப்படுத்தி அவர்கள் தெரிவித்திருந்தனர் எனவும் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.
முன்னைய ரணில் அரசுடனான, விடுதலைப்புலிகளது சமாதானப் பேச்சுக்களின்போது முகவராக செயற்பட்டு வந்திருந்த எரிக்சொல்ஹெய்மின் கடந்த கால செயற் பாடுகள் தொடர்பிலான காணொலி உரையாடல் ஒன்றின்போதே ஜெயச்சந்திரன் இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.
அப்போதைய சூழலில் இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முகவர்களாகச் செயற்பட்டு வந்திருந்த தமிழ் துணை ஆயுதக்குழுக்களது, உறுப்பினர்கள் ஊடாக முன்னணி செயற்பாட்டாளர்கள் வேட்டையாடப்பட்டு வந்திருந்தனர்.
கடத்தல்கள் மற்றும் கொலைகள் அத்தகைய தரப்புக்களின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவ்வாறே இலங்கை அரச உயர்மட்ட பணிப்பின் பிரகாரம் தராகி சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டதுடன், இலங்கை நாடாளுமன்றுக்கு அருகில் கொல்லப்பட்ட பின்னர் சடலமாக வீசப்பட்டிருந்தார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரையான காலப் பகுதியில் 39 க்கும் அதிகமான தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டு அல்லது காணாமலோ ஆக்கப்பட்டிருந்தபோதிலும், கொலையாளிகள் எவரும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.