தனியார் பேருந்து தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது

290 0

downloadஅகில இலங்கை தனியார் பேரூந்து சங்க சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

இன்று காலை வேளையில், ஜனாதிபதியுடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான அபராத பணத்தை குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 46 அரச பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மாத்தறை, பாணந்துறை, வவுனியா, தம்புள்ள, புத்தளம், கண்டி, திருகோணமலை, குளியாப்பிட்டிய, தங்கொட்டுவ, தம்பதெனிய, யக்கல, பயாகல, கெரவலபிட்டிய, ஆகிய பிரதேசங்களில் வைத்து அரச பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான உடமைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து, அரச உடமைகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.