யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழப்பம்; 22 மாணவர்களுக்குத் தடை விதித்தது பேரவை

406 0

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது. துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்த குறித்த 22 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் நேற்றுக் கூடி மேற்குறித்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளனர்.

விசாரணை நிறைவு பெறும் வரையில் மாணவர்களின் வகுப்புத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகப் பேரவையால் முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் ம.நடராஜசுந்தரத்தைக் கொண்ட தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களில் கணிசமானவர்கள் கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்வேறு குழப்பகரமான சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என்று நேற்றைய பேரவைக் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.