மீட்பருக்காக காத்திருக்கிறது தமிழினம்!

915 0

“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி இறுதியாக உரைத்த வார்த்தை .

இந்திய இராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து போர் தொடுத்தது . கோப்பாய் மண்ணில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் 10.10.1987 இல் காலில் காயமுற்ற மாலதி காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தாள்.

தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி, தன் சக தோழியிடம் கூறிவிட்டு ” சைனைட்” அருந்தி வீரச்சாவடைந்தாள்.

முதல் பெண் மாவீரரர் ஆகி தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைத்தாள். மாலதி வீரச்சாவடைந்த நாள் தமிழீழ பெண்கள் தினமாக நனைவு கூறப்படுகின்றது.

மாலதி வழியில் பல்லாயிரக்கணக்னான பெண்கள் தமிழீழ தேச விடுதலைக்காக கிளர்தெழுந்தார்கள்.விடுத்தலைப் போராளிகளாக களம் பல கண்டார்கள் . ”மாலதி படையணி” என்னும் தாய்ப்படையணி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மிகப் பெரிய வலுச்சேர்த்தது.

தன்னுடைய இனம் பாதுகாக்கபட வேண்டும் என்பதற்காய் தான் ஏந்திய ஆயுதம் உரியவரின் கைகளில் சேர வேண்டும் என்ற தார்மீக கடமையை தன் உயிர் பிரியும் இறுதி நேரத்தில் கூட 2ஆம் லெப். மாலதி ஆற்றினாள்.

2ஆம் லெப். மாலதியை போன்று ஆயிரக்கணக்கான மாவீரர்கள் காப்பாற்றிய ஆயுதங்கள் இன்று மௌனிக்கப்பட்டு. தமிழினம் நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றது.

மீட்பருக்காக காத்திருக்கிறது தமிழினம்.