சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம்

286 0

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு முன்பாக போராட்டத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

இதன்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டியும், சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுடன் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே, இராணுவத்தினராலும், துணை இராணுவ குழுக்களினாலும் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோசமெழுப்பினர்.

இதேநேரம், இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணையை நிராகரிப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.