ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்?

262 0

அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் இடையே முதல்வர் பதவி குறித்து வாக்குவாதம் நடந்துள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓ. பன்னீர் செல்வம், தற்போதைய ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். என்னை முதல்வராக்கியது மறைந்த ஜெயலலிதா. ஆனால் உங்களை முதலமைச்சராக்கியது சசிகலா எனக் கூறியதாக தெரிகிறது.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு பேரையும் முதல்வராக்கியது சசிகலாதான். எனது தலைமையிலான ஆட்சி (முதல்வராக) சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமர் மோடியே பாராட்டு உள்ளாரே.. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அடுத்த மாதம் 7-ந்தேதி யார் முதல்வர் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,