யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016

508 0

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.

தேசிய மாவீரர் நாள் 2016 யேர்மனியில் Dortmund நகரில் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு , தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களின் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்தன.பொதுச்சுடரினை முனைவர் சார்னி அவர்கள் ஏற்றிவைத்தார்.

pic17

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தேசிய மாவீரர்நாள் அறிக்கை ஒலி பரப்பப்பட்டதுடன் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈகம் செய்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரரின் சகோதரியால் ஏற்றப்பட்டது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும் தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது.சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டது. மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக்கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

img_1641

pic32

pic56

தமிழீழ விடுதலைக்காய் தம்மை விதையாக்கி சென்ற மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு இயக்க மரபின் அடிப்படையில் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட யேர்மன் வாழ் உறவுகள் கலந்துகொண்டு தமது காவல்தெய்வங்களை வணங்கினார்கள்.

மண்டபத்தில் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெற்ற சமநேரத்தில் Essen நகரத்தில் அமையப்பெற்றுள்ள மாவீரர் தூபிக்கு முன்னாலும் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அக்காட்சியை மண்டபத்தில் நேரடியாக அகன்ற வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டமையானது உணர்வுபூர்வமாக காட்சியளிகப்பட்டது.

எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என்பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிடமுடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்திநின்றது.

மாவீரர்களுக்கான இசைவணக்கத்தை இளம் சூரியன் இசைக்குழுவினர் வழங்கியதோடு, எழுச்சி நடனங்கள், கவிதைகள், நாடகம் மற்றும் தமிழீழ போராட் டத்தில் அழியாத சுடர்களாக விளங்கும் மில்லர் முதல் அனந்தபுரச் சமரில் வீர காவியம் கொண்ட வீரத்தளபதிகளின் வீரம் செறிந்த வரலாற்றையும் எங்கள் முன் இருக்கும் கடமையையும் எடுத்துரைக்கும் விதமாக 120 க்கும் மேலான நாட்டிய நடன மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு அமையபி ப்பெற்ற “மண் காக்கும் தெய்வங்கள்” நாட்டிய நாடகமும் எமது போராட்டத்தின் வீரத்தை பறைசாற்றியது. தமிழீழ பாேராட்ட வரலாற்றின் அர்ப்பணிப்பை தத்துரூபமாக எடுத்துக் காட்டி மண்டபத்தில் மக்களை உருக வைத்தது.. உணர்வு பூர்வமாக சிந்திக்க செய்யும் பாடல் வரிகள், அதற்கு உருவம் காெடுத்து உத்வேகப்படுத்திய இசைமபை்பு, அதற்கேற்ப அற்புதமாக பாடியாேர் குரல்கள் என அனைவரையும் உணர்வேற்றி உருக வைத்தது.

தேசிய மாவீரர் நாளில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த ஊடகவியாளரும் ,ஒரு பேப்பர் பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் திரு கோபி ரத்தினம் அவர்கள் இன்றைய சமகால அரசியல் நிலைமையை தெளிவாக எடுத்துரைத்து உரையை ஆற்றி இருந்தது மண்டபத்தில் உணர்வோடு சங்கமித்து இருந்த மக்களின் மனதில் நம்பிக்கையையும் தெளிவையும் உருவாக்கியது.

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையும் மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து பல்லின மக்களிடம் தமிழின அழிப்பை அங்கீகரிக்க வைப்பதற்கான அரசியல் வேலைத்திட்டம் ” Anerkennung des tamilischen Völkermordes ” மாவீரர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இச் சிறப்பு நிகழ்வுக்கு யேர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் நீதிபதியாக கலந்துகொண்டவர்களில் ஒருவரான முனைவர் சார்னி அவர்களும் , மதகுரு ஆல்பர்ட் கோலன் அவர்களும், ஊடகவியாளர் கோபி ரத்தினம் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பே என உறுதியாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தி கையெழுத்திட்டனர்.

தாயகத்தில் தொடர்ச்சியாக உதவித்திட்டங்களை மேற்கொண்டுவரும் ஹெல்ப் போர் ஸ்மைல் நிறுவனம் தாயக மக்களின் வாழ்வாதார நலனை மேலும் மேம்படுத்த தமது புதிய சேமிப்புப்பேழையை அறிமுகப்படுத்தியது.

நிகழ்வில் மாவீரர் நினைவு சுமந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட மாவீரர் மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழாலயம் அனைத்துக்கும் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டதுடன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் தயாரிப்பில் வெளியிடப்பட்ட “மண் காக்கும் தெய்வங்கள்” என்ற இறுவெட்டு மற்றும் ” கார்த்திகை தீபம் ” இதழ் 3 மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது.அத்தோடு இம்மாத எழுகதிர் சஞ்சிகையின் பதிப்பும் மக்களிடம் சென்றடைந்தது.

தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் உறுதிகூறப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடலை அனைவரும் இணைந்து பாடியதோடு, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரக மந்திரத்தை உரத்து உச்சரித்ததோடு நிகழ்வுகள் யாவும் மாவீரம் நிறைந்த மனதுடன் நிறைவுபெற்றன.

pic27 pic28 pic29 pic30 pic31 pic22 pic23 pic24 pic25 pic26 pic21 pic33 pic34 pic35 pic16 pic20 pic19 pic18 pic12 pic13 pic14 pic15 pic7 pic2 pic3 pic4 pic5 pic10 pic9 pic11 pic6 pic1 img_1640 pic36 pic50 pic48 pic42 pic43 pic44 pic46 pic47 pic37 pic38 pic39 pic40 pic41 pic54 pic55