விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக யேர்மனியில் நினைவுத்தூபி
தேச விடுதலைக்காய் தம்மை முழுமையாக அர்ப்பணித்து , உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய் , ஓவியமாய் நின்ற எமது உறவுகளின் உறைவிடம் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அந்த அற்புத உயிர்களை வணங்க அங்கு ஒரு இடமும் இல்லை .
ஆனாலும் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் எமது விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக, அவர்களின் உணர்வுகள் , இலட்சியதாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையும், புனிதத் தன்மை வாய்ந்தவையாகும். எனவேதான் எமது அடுத்த தலைமுறை இந்த வரலாற்று சுவடியை காலம் காலமாக நினைவுகூரும் வகையில் யேர்மனியில் எசன்( Südwest-Friedhof, Fulerumer Str. 15B, 45149 Essen) நகரில் இந் நினைவுத்தூபி 29.11.2014 அன்று தொடக்கம் நிறுவப்பட்டுள்ளது. நினைவுத்தூபி நிறுவப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்ததியாவது குறிப்பிடத்தக்கதாகும்.
தாயக விடுதலைக்காக மகத்தான தியாகங்களைப் புரிந்து தமிழீழ போரிலே தம்முயிர்களை ஈந்த காவிய நாயகர்களையும் மக்களையும் நினைவு கூருகின்ற இத் தூபி யேர்மனியில் அடக்க முடியாத தமிழர் வீரத்தை அடையாளப்படுத்தி நிற்பதேடு, வேற்றின மக்களுக்கும் எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச்செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.
இனைக்கப்பட்டுள்ள படங்கள் மாவீரர் நாள் 2016 அன்று நினைவுத்தூபி முன் எடுத்தவையாகும்