ரஞ்சித் அலுவிஹாரேயின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானம்

195 0
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரேவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் சோஹித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் ஆராயப்பட்டது.

அதனை தொடர்ந்து மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்த நீதிபதிகள் குழாம் மனு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு அதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள 14 பேருக்கு அழைப்பாணை வௌியிட்டு உத்தரவிட்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணும் போது மோசடி ஏற்பட்டுள்ளதாக மனுதாரரான ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

லக்கலை மற்றும் தம்புள்ளை வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து தனது பிரதிநிதிகள் 21 பேரை அங்கிருந்த வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் தெரிவான ரோஹிணி கவிரத்னவிற்கும் தனக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 416 என சுட்டிக்காட்டினார்.