’பணத் தேவையை பூர்த்தி செய்யவா அனுஷா களமிறங்கியுள்ளார்?’

389 0

மலையக மக்கள் முன்னணி என்பது தனிக்குடும்பத்துக்குரிய கட்சி கிடையாது. அது மலையக மக்களுக்கான கட்சியாகுமென மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம்  பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளதோடு, மக்களுக்கு சேவைசெய்வதற்காக போட்டியிடுகின்றாரா அல்லது பண தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனுஷா போட்டியிடுகின்றாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், “மலையக மக்கள் முன்னணியின் இரு பிரதான அமைப்புகளான கவுன்சில், மத்தியகுழு ஆகியன தற்போதைய தலைவருக்கு விலை போய் விட்டதாக அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினர்கள் எவருக்கும் விலை போககூடியவர்கள் அல்லர். கொள்கையின் அடிப்படையிலும், மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்தவர்கள்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த சாந்தினி சந்திரசேகரன், 2015ஆம் ஆண்டு உயர்பீடம்  எடுத்த முடிவுக்கு எதிராகச் செயற்பட்டார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி, மலையக மக்கள் முன்னணியை தோற்கடிக்க முயற்சித்தார். ஆனால், இரண்டு எம்.பிக்களை எமது கட்சி பெற்றெடுத்தது.” என்றார்.

அதுபோல அவரது தாயார் அன்று செய்த பிழையை இன்று அனுஷா செய்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு மலையக மக்கள் முன்னணியை தோற்கடிக்கும் நோக்கில் செயற்படுகிறார். அவரின் உரைகள் இதனையே உணர்த்துகின்றன.

மக்களுக்கு சேவைசெய்வதற்காக போட்டியிடுகின்றாரா அல்லது பண தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனுஷா போட்டியிடுகின்றாரா?  எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் 14 மாவட்டங்களில் வாழும் 15 இலட்சம் மலையக மக்களுக்கும் சொந்தமான கட்சியே மலையக மக்கள் முன்னணி. அது குடும்ப கட்சி கிடையாதெனவும் தெரிவித்தார்.