டில்லி பரிசோதனை முறை: முதல்வருக்கு ஸ்டாலின் ஆலோசனை

211 0

டில்லி அரசின், ‘செரலாஜிக்கல் டெஸ்ட்’ எனப்படும், குருதி நீரியல் பரிசோதனை முறையை, தமிழகத்திலும் கடைப்பிடிக்க, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:
அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். ஊரடங்கு கால மின் கட்டணத்தை, உடனே குறைக்க வேண்டும். ரேஷன் கடைகள் வாயிலாக, அனைவருக்கும் முக கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக பருவத் தேர்வுகளை ரத்து செய்து, அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். களப் பணியாளர்களாக விளங்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் துறையினர் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அளிக்க வேண்டும்.
கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளான களப் பணியாளர்கள் அனைவருக்கும், அரசு அறிவித்த நிதியை, உடனே வழங்க வேண்டும். கொரோனா சோதனை குறித்த விபரங்களை, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்.

கொரோனா சமூக பரவல் ஆகி விட்டதா, இல்லையா என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற, தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு நியமிக்க வேண்டும்.
விடிய விடிய ஆலோசனைகளை கேட்டு, ‘பல்டி’ அடித்து விட்டு, ஊடகங்கள் முன், ‘ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்’ என, வழக்கம் போல கூறக் கூடாது.
இந்த ஆலோசனைகளை காது கொடுத்து கேட்டு, முதல்வர் இ.பி.எஸ்., உடனே செயல்படுத்த வேண்டும்.டில்லி அரசு, குருதி நீரியல் பரிசோதனை முறையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனைவரையும், விரைவில் கண்டறிய, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதுபோன்ற பரிசோதனை முறையை, தமிழகத்திலும் கடைப்பிடிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.