சிறிலங்காவில் ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றதென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பிலுள்ள வெலிகட சிறையை நேரில் சென்று தப்புல டி லிவேரா பார்வையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் தப்புல த லிவேரா மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.
மேலும் சுமார் 6000க்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 17,500யை கடந்துள்ளது.
சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒழுக்கம் மோசமடைந்துள்ளது. அதிகாரிகள் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அடிமையாகிவிட்டனர்.
இதனால் சிறைச்சாலை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது.
ஆகவே சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும்.
அந்தவகையில் சிறைத்துறையில் நேர்மையான அதிகாரிகள் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.