மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

238 0

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர், சேருநுவர பகுதிகளில் தனியார் நிதி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட சில இளைஞர்களின் முகநூல் கணக்குகளை புலம்பெயர் தமிழர் ஒருவரது சிங்கள இனவாத ஊடகம் காட்டிக்கொடுத்திருந்தது.

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், தமிழீழ வரை படம், மற்றும் புலிகளின் படங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்ததாக, செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஆயினும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மற்றும் நினைவேந்தல் தொடர்பிலேயே அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

ஆயினும் சிங்கள ஊடகமோ தமிழ் உணர்வாளர்கள் மீது புலனாய்வுப்பிரிவு நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தது.

இதையடுத்து, சிங்கள சமூக ஊடகங்களில் இது பரவலாக பகிரப்பட்டது.

இந்நிலையில், அதனை தமிழ் ஊடகங்கள் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து சிங்கள இணையம் செய்தியை அகற்றியிருந்தது.எனினும் சிங்கள சமூக ஊடகங்கள் அதனை பகிர்ந்ததையடுத்து  தொடர்புடைய இளைஞன் ஒருவர் குற்றவியல் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். மேலும் ஐவர் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.