தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு – ஜே.வி.பி.

301 0

பொது தேர்தல் தொடர்பாக சுயாதீனமான ஒரு முடிவினை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்திருந்த நிலையில் தற்போது அரசாங்கத்திற்கும் ஆணைக்குழுவிற்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, பொது தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை காணப்படும் நிலையில் ஜனாதிபதி தனக்கு கிடைத்த அதிகாரத்தின் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் வைரஸ் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்த்தை கலைத்து தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது, உலக நாடுகளில் வைரஸ் தொடர்பான அச்சம் இருந்தபோதும் குறிப்பாக இலங்கைக்கும் அபாய நிலை இருப்பதை அறிந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த அரசாங்கத்திற்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்கவில்லை என்றும் அவர்கள் தங்கள் அதிகாரத்த்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்தார்கள் என சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாகவே வேட்புமனு தாக்கல் நிறைந்தவுடன் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது என்றும் குற்றம் சாட்டினார்.

இவ்வாறானதொரு நிலையில் சுயாதீனமாக தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைப்பது என்ற சிறந்த முடிவை எடுத்த சந்தர்ப்பத்தில் இருந்தே ஆணைக்குழுவிற்கு அரசாங்கத்திற்கும் இடையில் மோதல் ஆரம்பித்துவிட்டது என குறிப்பிட்டார்.

மேலும் இவ்வாறானதொரு நெருக்கடி நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் இந்த அரசாங்கம் தேர்தல்கள் அணைக்குழுவிற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துவிட்டது என குற்றம் சாட்டினார்.

நெருக்கடி காலத்தில் மக்களின் தேவையை அறிந்து செயற்பட வேண்டும் என்றும் மக்களின் அர்பணிப்பினை புறம்தள்ளி தேர்தலை நடத்தியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் தேர்தல் அவசியமா என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.