ஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்

299 0

மார்த்தாண்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர். கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டு அவர்களை தேர்வு எழுத வைத்தனர்.இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே சுற்றி வருபவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சில இடங்களில் நூதன தண்டனை கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலியாக உலா வந்தவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்வு வைத்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

மார்த்தாண்டம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு உத்தரவை மீறி அந்த வழியாக மோட்டார்சைக்கிள் மற்றும் சாலையில் நடந்துசென்ற வாலிபர்களை போலீசார் மடக்கிப்பிடித்து நூதன தண்டனை கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் 2 விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு வினாத்தாள்களிலும் தலா 10 வினாக்கள் இருந்தன.

* கொரோனா வைரசின் காதலி பெயர் என்ன?

* கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு?

* கொரோனா வைரசினால் அதிகமாக பாதிக்கப்படும் உடல் அமைப்பு மண்டலம் எது?

* கொரோனா வைரசில் இருந்து நம் நாட்டை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என வித்தியாசமான 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இதைக்கண்டு அந்த வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடைத்தாளில் ஒரு கேள்விக்கு தவறான பதில் அளித்தால் 10 தோப்புக்கரணங்களை போலீசார் போட வைத்தனர். பின்னர், அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதேபோல், குலசேகரம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த சிலரை போலீசார், “கொரோனாவை ஒழிப்போம், வீட்டைவிட்டு வெளியே வர மாட்டோம் என கோஷம் போட வைத்தனர்.