நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுலானது!

210 0

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டமே மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதேபோன்று யாழ். மாவட்டத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை நீடித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.