மன்னார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை 6 மணிமுதல் மக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவுசெய்ய முந்தியடித்துக் கொண்டனர். அந்தவகையில் மன்னார் சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
மேலும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார முறைப்படி பொருட்களைக் கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்தனர்.
குறிப்பாக, மன்னார் நகரின் பல பாகங்களிலும் மரக்கறி உட்பட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் இன்றைய தினம் பொருட்களை எவ்வித அசௌகரியங்களும் இன்றி கொள்வனவு செய்துள்ளனர்.
மேலும், மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள வீதிகளில் விசேட அதிரடிப்படையினர் கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக அத்தியாவசியப் பொருட்கள், மரக்கறி, முட்டை, மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உள்ளிட்ட சோதனை நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் பார்வையிட்ட நிலையில் சட்ட திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.