நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்

324 0

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மருசுவில் படுகொலை தொடர்பான தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கூறுகையில், “தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும் நம்பக் கூடாது. நாட்டின் உள்நாட்டுப் போரின்போது எட்டு பொதுமக்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சிப்பாயை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகப் பிரிந்துபோவது தான் ஒரே தீர்வு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியதன் விளைவுதான் இது.

கொன்றவனையே நீதிபதி ஆக்கும் உள்ளக விசாரணை வேண்டாம். கோழிகளுக்கு ஓநாய் பாதுகாவலன் என்று நம்புவதற்கு தமிழ் மக்கள் இனியும் தயாரில்லை. தமிழ் இனப் படுகொலையாளிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்புக் கேட்க ஐ.நா.விடம் சர்வசன வாக்கெடுப்பைக் கோரவேண்டும்.

சிறிலங்காவின் நீதித்துறை சுயாதீனமாக இயங்கவில்லை. அதற்குள் ஆட்சியாளர்களினதும் இராணுவத்தினரதும் தலையீடுகள் உண்டு. நாடு இராணுவ மயமாக்கலை நோக்கிப் போகிறது. தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள் சேர்ந்து வாழ முடியாது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.