கிளிநொச்சி மாவட்டத்தில் 8,152 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கக் கோரிக்கை!

194 0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாளாந்தம் தொழில் செய்து வாழ்கின்ற குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என பல தரப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 8,152 குடும்பங்களுக்கு உலருணவு வழங்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன், அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளருக்கு நேற்று (திங்கட்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நெருக்கடி நிலை தொடர்பாக அரசியல்வாதிகள் பலரும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டுசென்றனர். இதனையடுத்து இவ்வாறான குடும்பங்களுக்கு உலருணவு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மாவட்டச் செயலகங்கள் முன்னெடுக்கும் வகையில் தகவல் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரூபாவதி கேதீஸ்வரன் அனுப்பிய கடிதத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகப் பரிவில் 5,938 குடும்பங்களுக்கும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 610 குடும்பங்களுக்கும், பூநகரியில் 639 குடும்பங்களுக்கும், பச்சிலைப்பள்ளியில் 965 குடும்பங்களுக்கும் உலருணவு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.