தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம்- அருண் தம்பிமுத்து

204 0

தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே கொரோனா வைரஸை தடுக்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டுமென  மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 மணித்தியாலம் பிரயாணம் செய்யும் தூரம் தொலைவிலுள்ள மட்டக்களப்பில் தடுப்பு முகாம் உருவாக்குவது ஒரு தெளிவான செயலல்ல.

சர்வதேச ரீதியாக பார்த்தால் தடுப்பு முகாம்கள் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் இருப்பது தான் வழமை. ஆனால் வழமைக்கு மாறாக இந்த தடுப்பு முகாம் இருக்கின்றது. எனவே அரசு இந்த நடவடிக்கையை மீள்பரீசிலனை செய்யவேண்டும் .

மாந்தீவு விடயத்தை கூட சில வாரங்களுக்கு முன் மாந்தீவு தடுப்பு நிலையத்துக்கு பொருத்தமற்றது என கூறியிருந்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் மாந்தீவை அரச மருத்துவ சங்கம் முன்வைப்பது பொருத்தமற்றது.

அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வருட யுத்தத்தில் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து, மக்கள் மீண்டும் பயத்திலும் பீதியில் இருக்கின்றார்கள். எனவே தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே அரசு தேர்தல் இலாபத்தை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் கொரோனாவை  தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே இந்த காலகட்டத்தில் எமது மக்கள் அனைவரும் எமது பண்பாட்டில் உள்ள இருகரங்களை கை கூப்பி வணக்கத்தை தெரிவித்து தொற்று நோய்க்கு மாறாக செயற்பாடுகளில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.