கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மன்னாருக்கு அழைத்துவருவதை ஏற்கமுடியாது- நகர மேயர்

259 0

நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் எனக்கருதி மன்னாரில் தனிமைப்படுத்துவதற்காக அழைத்து வரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவிக்கையில், “நாட்டிற்குள் வருபவர்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படுபவர்களை மன்னாருக்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கை மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ கட்டடத் தொகுதியில் இன்று வைரஸ் சந்தேகநபர்களைக் கொண்டுவந்து தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காமன்ஸ் அமைந்துள்ள பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கமுடியும்.

ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்த மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மன்னாருக்கு அழைத்துவந்து தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.