தமிழரசுக் கட்சியின் அழிவிற்கு சுமந்திரனே காரணம்- சுரேஷ்

273 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வளவு காரணமாக இருந்தாரோ, அதேபோன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அழிவிற்கு சுமந்திரன் இருக்கிறார் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாகவே அந்தக் கட்சியின் மகளீர் அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டு என்பது நிதர்சனமான உண்மை. அது இன்று நேற்றல்ல ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

அதாவது, ஐ.தே.க.வினால்தான் கொண்டு வரப்பட்ட ஒருவர்தான் சுமந்திரன் என்பது பலருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. குறிப்பாக கொழும்பில் இருக்கக் கூடிய ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மட்டத்திலும் அதே போல கூட்டமைப்பிலுள்ள பலருக்கும் இது தெரிந்திருந்தது. அவ்வாறாக அவர் கூட்டமைப்பிற்குள் வந்த பின்னர்தான் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியிருந்தனர்.

அதேபோன்று  இன்றைக்கு தமிழரசுக் கட்சியிலிருது பலரும் வெளியேறி வருகின்றனர். இவ்வாறு கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழரசுக் கட்சியும் சிதைவதற்கு இன்னும் சொல்லப் போனால் அழிவதற்கு சுமந்திரனெ காரணகர்த்தாவாக இருக்கின்றார்.

சுமந்திரனைப் பொறுத்தவரையில் இலங்கையில் இவ்வாறான கட்சிகள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என்ற அடிப்படையில் அதனை முடிவிற்கு கொண்டு வருவதற்காகவே சிந்திக்கின்றதாகவே கருதுகிறோம்.

குறிப்பாக புலிகளுடைய அழிவிற்கு கருணா என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வளவு தூரம் காரணகர்த்தாவாக இருந்தாரோ அதேபோல கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் அழிவிற்கு சுமந்திரனும் நிச்சயமாக காரணகர்த்தாவாக இருக்கின்றார்” என்றார்.