கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியை இழந்து வருகின்றமைக்கு கோடிஸ்வரனே காரணம்- பிரசன்னா

322 0

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாமல், பேரம் பேசும் சக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு  இழந்து  வருவதற்கு காரண கர்த்தா முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  உப.தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக நாடாளுமன்ற தேர்தலில் பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் நிலவி வரும் பனிப்போர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதாக கூறப்படும் கவிந்திரன் கோடிஸ்வரன் என்பவர் வெல்வதற்கு சாத்தியமில்லை.

இது எமது கட்சிக்கும் மக்களுக்கும் செய்த துரோகத்தின் பரிசு ஆகும். தற்போது வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாக உள்ள நிலையில் இவர் கட்சி தலைவர்களை விலைபேசுவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் தேர்தலில் போட்டியிட கட்சிகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவர்களினை சந்தித்து, கடாவிருந்து வைத்து வருவதை முகநூலில் அவதானிக்க முடிகிறது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் அடிக்கடி  குளறுபடி  செய்யும் ஒரு நபராகவே இவர் வலம் வருவது வேதனையாக உள்ளது.  இவரது அண்மைக்கால செயற்பாடு ஒரு குடும்பத்திலுள்ள தம்பியுடைய மனைவியை கவர்ந்து மணமுடிப்பதற்கு ஒப்பானது ஆகும்.

தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்த கோடீஸ்வரனை இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் பட்டியலில் ஈர்த்துள்ளமை தமிழரசு கட்சிக்குள்ளும் குளறுபடியை தோற்றுவித்துள்ளது.

கடந்த 2018  ஒக்டோபர் அரசியல் தளம்பல் காலத்தில் சதாசிவம் வியாழேந்திரனுடன் இணைந்து அரசு பக்கம் தாவுவதற்கு தயாராக இருந்த கோடீஸ்வரனை எங்களுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்தான் அடக்கி வைத்திருந்தார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அத்துடன்  கோடீஸ்வரன் என்பவர்  தனது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டின் போது தனது நாடாளுமன்ற சம்பளத்தை அம்பாறை மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு செலவு செய்வதாக அறிக்கைகளை வெளிட்டிருந்தார். ஆனால் இன்று வரை ஒரு சதமேனும் கல்விக்காக செலவழிக்கவில்லை. மாறாக கடா விருந்தும் மது போத்தல்களும் வழங்கி இளையோர்களை கெடுத்து வருபவருக்கு, தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியிருப்பது தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களுக்கெதிரான சதி என தெரிவிக்க விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.