22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம்

266 0

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்  த.இராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தம் முடிந்து 10 வருட காலமாகியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத வகையில் இந்த தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். இதுவரை காலமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டவர்களே இதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

அவர்கள் செய்யத் தவறிய மற்றும் பேரம் பேசும் வல்லமை இருந்தும் அதை பயன்படுத்தாமல் தங்களின் சுயநலத்தால் செயற்படுத்த முடியாமல் போன அனைத்து விடயங்களுக்கும் நாம் முன்னுரிமை கொடுத்து, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபட வேண்டும் என்ற கருத்து அனைத்து உறுப்பினர்களாலும் வலியுறுத்தப்பட்டது.

ஆக்கபூர்வமான முறையில் ஆரோக்கியமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு, காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன. வேட்பாளர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.