தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை ஏற்படும்: ஐகோர்ட்டு கடும் கண்டனம்

252 0

201611110934544999_president-rule-tamil-nadu-and-would-take-effect-high-court_secvpfதமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல்கள் ஜி.கிருஷ்ணமூர்த்தி, யானை ராஜேந்திரன், ஜி.எஸ்.மணி ஆகியோர் 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கு மனுக்களில், ‘கோர்ட்டுகளில் வழக்கு தொடருபவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் விதமாக நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், தேவையான ஊழியர்களை நியமிக்கவும் வேண்டும் என்றும், அதற்காக ஆகும் செலவுகளுக்கு, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இதேபோல, 2010-2011-ம் ஆண்டுகளில் கீழ் நீதிமன்றங்களுக்கு மேஜை-நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக ரூ.9.41 கோடி ஒதுக்கவேண்டும் என்று 2011-ம் ஆண்டு ஐகோர்ட்டே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முழு அமர்வில் கடந்த செப்டம்பர் 14-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில், ‘இந்த வழக்குகள் எல்லாம் 14 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், நீதிமன்றங்கள் செயல்படுவதற்கும் தேவையான நிதியை பெறுவதில் உள்ள சிக்கல் இதுவரை தீரவில்லை. நிதி பற்றாக்குறையினால், கடந்த அக்டோபர் மாதம் கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளுக்கு நடத்தவேண்டிய 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், 2014-15, 2015-16-ம் நிதியாண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு பெறத்தவறியதால், அந்த நிதி எல்லாம் மத்திய அரசுக்கு திரும்பிச் சென்றுவிட்டது. எனவே, மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெறுவதற்காக மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வின் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக நிதித்துறை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவை படித்து பார்த்தோம். ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான நீதித்துறை செயல்படுவதற்கும், நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பதற்கு மிகுந்த வேதனையை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போதுள்ள நிலையின் அடிப்படையில், நீதித்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவது என்பது முன்பைவிட படுமோசமாக உள்ளது.

தமிழக ஜூடிசியல் அகடாமிக்கு போதிய நிதியை ஒதுக்காததால், நீதிபதிகளுக்கு நடத்தவேண்டிய 2 பயிற்சி வகுப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.35 லட்சத்தை ஒதுக்குவது குறித்த பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரை, அரசின் பரிசீலனையின் கீழும், அதிகாரிகளின் ஒப்புதலுக்காகவும் உள்ளன என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி அரசு சொன்னாலும், இதுவரையில் அந்த பரிந்துரையின் அடிப்படையில் வழங்கவேண்டிய பணத்தை எங்களால் (நீதிபதிகளால்) பார்க்கக்கூட முடியவில்லை.

தமிழக அரசுக்கு ரூ.150 கோடி மதிப்பில் 100 பரிந்துரைகளை தமிழக நீதித்துறை அனுப்பியுள்ளது. அவையெல்லாம் அரசிடம் நிலுவையில் இருந்து வருகின்றன. முன்னுரிமையின் அடிப்படையில், இந்த 100 பரிந்துரைகளில் 50 பரிந்துரைகளை முதல்கட்டமாகவும், மீதமுள்ள 50 பரிந்துரைகளை இரண்டாவது கட்டமாகவும் பரிசீலியுங்கள் என்று தமிழக அரசுக்கு நாங்கள் ஆலோசனையும் கூறிவிட்டோம்.

அப்படி கூறியும், தமிழக அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. அதிலும் எத்தனை பரிந்துரைகளை பரிசீலித்து, அதை ஏற்று நிதி ஒதுக்கப்படும் என்ற விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

இதுமட்டுமல்ல, மத்திய அரசு ஒதுக்கிய ரூ.150 கோடி நிதியை, தமிழக அரசின் திறமையற்ற மற்றும் இயலாமைத்தனத்தால், அந்த நிதியை பெறக்கூடிய பணிகளை மேற்கொள்ளவில்லை.

அதனால், அந்த நிதி காலாவதியாகிவிட்டது. மத்திய அரசுக்கே அந்த நிதி திரும்பிச் சென்றுவிட்டது. இதற்கு தமிழக அரசு தான் முழுக் காரணமாகும். இதன் காரணமாக 2016-17-ம் நிதியாண்டில் வெறும் ரூ.50 கோடியை மட்டும் தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்த நிதி போதாது, கூடுதலாக நிதி வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு இப்போது கோருகிறது.

மாநில நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு தான் உள்ளது. இதில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியை வழங்கி உதவிக்கரம் மட்டும்தான் நீட்டும்.

தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீதித்துறைக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

மேலும், தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா?, பிற துறைகளுக்கு எல்லாம் போதிய நிதிகளை ஒதுக்க முடியாமல் திணறுகிறதா?, நிதி நெருக்கடியில் உள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்யப்போகிறதா? என்பதுதான் எங்களுடைய கேள்வியாகும்.

அப்படி ஒரு சூழ்நிலை நிலவினால், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360-ன் கீழ் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைத்தான் அமல் படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மேலும், நிதியை இப்படிதான் கையாளவேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசுக்கும், மத்திய அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும்.

எனவே, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று பிரகடனம் செய்யப்போகிறதா? என்பதை தமிழக நிதித்துறை செயலாளர் விரிவான பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும்.

அதேபோல, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தை ஒட்டியுள்ள 63 சென்ட் நிலத்தில் இயங்கும் பஸ் நிலையம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த இடத்தை ஐகோர்ட்டு பஸ் நிலையம் என்ற பெயரில் பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே, இந்த பஸ் நிலையத்தில் எத்தனை பஸ்கள் வந்து செல்கின்றன? இந்த பஸ் சேவைகளை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர்? என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்.

அதனால், தமிழக போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலாளர், மாநகர அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள், இந்த பஸ் நிலையம் குறித்து விரிவான அறிக்கையை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும்.இந்த வழக்குகளின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.