இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் மருத்துவ அறிக்கை வெளியானது

192 0

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நேற்று இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தமையினால் அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பதனை கண்டறியும் பொருட்டு பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்வரும் சித்திரை புத்தாண்டு நிகழ்வுக்காக தென்கொரியா மற்றும்  இத்தாலியில் இருக்கும் பெரும்பாலான இலங்கையர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது, அவர்களுக்கு கொரோனா வைரஸ்  தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறியும் பொருட்டு, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி அவதானிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 17 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 655 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.