ஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு!

223 0

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய நிலையில் எந்தவித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள், சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் என்பன தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களின் பின்னர் எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி கூட்டம் நிறைவடைந்துள்ளது.

புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான இறுதித் தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் என கடந்த புதன்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் தீர்மானம் எட்டப்படவில்லை.

இதனிடையே, சஜித் பிரேமதாச தலைமையிலான பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில் நாளை மறுதினம் மீண்டும் செயற்குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.