வடக்கின் நான்கு மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பில் வழக்குத்தாக்கல்!

285 0

நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி வடக்கின் நான்கு மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளனர்.

அடுத்த வாரமளவில் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் நாம் பல போராட்டங்களையும் அழுத்தங்களையும் பிரயோகித்து அதன்பலனாக நாடாளுமன்றத்தில் இழுவை மடி தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் குறித்த சட்டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

இதனால் உள்ளூரிலும் இந்தியாவில் இருந்து வரும் இழுவை மடிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இந்தியாவிலிருந்து வருகை தரும் மீனவர்களின் எல்லை மீறல்கள் சமீபகாலமாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துவருகின்ற தன்மை காணப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து எல்லைதாண்டி வரும் மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி எமது வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றனர். நவீன கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மீன்வளம் குறைந்துகொண்டு செல்கின்றது.

எமது மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சரோ மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டியதாக அறிய முடியவில்லை. எனவே நடைபெறவுள்ள தேர்தலில் நாம் சிந்தித்து செயற்படுவது எனத் தீர்மானித்துள்ளோம். எமது பிரச்சினைகள் எமது அவலங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இழுவை மடிகளை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட நிலைமை காணப்படுவதனால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 4 மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது எனத் தீர்மானித்துள்ளோம். குறித்த வழக்கு தாக்கல் அடுத்த வாரமளவில் செய்யப்படும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.