இலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை – ஜி.எல்

296 0

இலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தாங்கள் ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த இரண்டரை வருடங்களாக, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மட்டும்தான் ஜனாதிபதி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

எமது அரசாங்கத்துக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடையாது. அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாதமையால், எதனையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது.

எனவே, மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது. இதனை ஜனாதிபதி நிச்சயமாக மேற்கொள்வார்.

பொதுத் தேர்தலில் எம்முடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைத்து களமிறங்கவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்கவே இந்தக் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஜெனீவா விவகாரமும் அதிகமாக பேசப்படுகிறது. ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இலங்கையின் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளதே ஒழிய, புதிய அரசாங்கத்தின் செயற்பாட்டை அல்ல.

எமது அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது. இந்த நிலையில், ஜெனீவா விவகாரத்தில் குறைப்பாடுகள் ஏதெனும் இருந்தால், அதற்கு நல்லாட்சி அரசாங்கம்தான் பொறுப்புக் கூறவேண்டும்.

ஆனால், எமது சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க நாம் எந்தவேளையிலும் தயாரில்லை என்பதையும் கூறியே ஆகவேண்டும்.

சர்வதேசத்திற்கு இலங்கையை பணிய வைக்கப்போவதில்லை. இதன் ஊடாக நாம் சர்வதேசத்திற்கு எதிரானவர்கள் என்று ஒருபோதும் கூறவில்லை.

மாறாக, தேசியப் பிரச்சினையொன்றுக்கு தேசியக் கட்டமைப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகிறோம். இந்தப் பிரச்சினைகளில் சர்வதேசத்தினர் தலையிட நாம் என்றும் அனுமதியளிக்கப் போவதுமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.