யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வைப் போக்கி, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி அடிதடி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் கல்லூரியில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், ஆசிரியர்கள் மூவர் காயமடைந்ததுடன், வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலையே அந்த வன்முறைக் குழுவின் சம்பவங்களைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


