நோர்வூட் பகுதியில் தீ விபத்து

214 0

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் இன்று இரவு 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 7 வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன் குறித்த வீடுகளில் குடியிருந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீ பற்றியதைத் தொடர்ந்து, நோர்வூட் பொலிஸார் மற்றும் ஹற்றன்-டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட  7 குடும்பங்களைச் சேர்ந்த 40பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், தோட்ட வைத்தியசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், நோர்வூட் பிரதேச சபையும் வழங்குகின்றன.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கும் நோர்வூட் பொலிஸார், ஹற்றன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.