பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்களை விசாரிக்கும் குழு வாரம் ஒரு முறை கூடும்!

242 0

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை சம்பவங்கள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளைக் கேட்டறியும் அமர்வுகளை விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது.

பகிடிவதைகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆராய அந்தக் குழு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பகிடிவதைகளைத் தடுப்பதற்கு பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் போது உப வேந்தர்கள் எதிர்நோக்கக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியுடைய அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதே வேளை மாணவர்களுக்கு ஆங்கிலத்தையும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தையும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் மாணவர்கள் சுய கல்வியை மேம்படுத்துவதற்கு அவர்கள் செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அந்த கூட்டத்தில் யோசனை தெரிவித்தார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சலீம் மர்சூக் 7 பேர் கொண்ட அந்த குழுவில் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் தாரக வர்ணசூரிய , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜனிதா வியனகே, வண.மாகம்மன பிரக்ஞா ஞானந்த தேரர், வண.பிதா கலாநிதி பெண்ட் ஷாந்த பெர்னாண்டோ , முன்னாள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக உபவேந்தர் சந்திரா எம்புல் தெனிய ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.