சைட்டம், நவில் நிறுவனங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர்கள் அடங்கிய குழு!

193 0

சைட்டம் நிறுவனம் மற்றும் நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலை குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர்கள் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், “சைட்டம் நிறுவனம் தொடர்பாக கடந்த அரசாங்மும் சுகாதார அமைச்சும் முரண்பாடான தீர்மானங்களை மாத்திரமே முன்னெடுத்துள்ளார்கள்.

விசேட குழுவின் அறிக்கையின் பிரகாரம் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். எவரது சொத்துக்களையும் உரிய காரணிகளின்றி அரசுடமையாக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சுமூகமான முறையில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.