சர்வதேச குற்றவியல் விசாரணையூடாகவே நீதி சாத்தியம்-உறவுகள் பெரும் போராட்டத்துக்கு அழைப்பு!

371 0

பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால்  சர்வதேச குற்றவியல் விசாரணை ஊடாகவே சாத்தியமாகும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வரும் மார்ச்சில் ஐ.நா. கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவிக்கையில், “இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தில் உள்ளக விசாரணையே வலியுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு இடத்திலும் கலப்புப் பொறிமுறை என்ற வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை.

இந்நிலையில் உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு சாதகம் ஏற்படப்போவதில்லை. இந்த 30/1 தீர்மானத்தை நிராகரிப்பதாகக் கூறியுள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு மூன்றாவது தடவையாகவும் வழங்கப்பட்ட இரண்டு வருடங்கள் அவகாசத்தில் ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது வருடத்தைத் தொடர்ந்தும் வழங்குவதில் எந்தவொரு நியாயப்பாடும் இல்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் என்ற வகையிலே 30/1 தீர்மானத்தில் நேரடியாக எம்மோடு தொடர்புபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகமானது வெறுமனே ஒரு கண்துடைப்பானதாகும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் பங்குகொள்ளும் ஐ.நா. உறுப்பு நாடுகளின் மனச்சாட்சியை தட்டும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் கிட்டுப் பூங்காவிலும், கிழக்கில் கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

தமிழ் மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்ற விடயமல்ல. மாறாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் தேசத்தை அழித்து ஒட்டுமொத்த இலங்கை தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆட்சிக்கு வந்த அனைத்துத் தரப்புக்களும் இலங்கை தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றனர். 2009 உடன் நிறைவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப் படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடிமறைப்பதற்கு 2009இல் ஆட்சியிலிருந்த அரசாங்கம் மட்டுமல்லாது சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்கத் தரப்புக்களுமே முயன்றனர். அதேசூழலே இன்றும் உள்ளது.

சிறிலங்காவினுடைய இராணுவத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்த சிங்கள தேசத்தின் நலன்களைப் பேணுவதாகவே உள்ள நிலையில், எதிர்காலத்திலும் இதே சூழலே தொடர்ந்தும் அமைந்திருக்கும். இந்தப் பின்னணியில் தமிழ் இனப் படுகொலைகளுக்கு நீதி கோருவதோ, மனித குலத்துக்கெதிரான போர்க் குற்றங்களுக்கு நீதி கோருவதோ, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவதோ, சிறிலங்கா அரசாங்கத்தின் பங்களிப்போடு ஒருபோதும் நடைபெறப்போவதில்லை. அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் அத்தகைய முயற்சிகளைத் தோற்கடிக்கக் கூடிய செயற்பாடுகளையே மேற்கொள்ளும் என்பதும் உறுதி.

பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணையூடாக மட்டுமே சாத்தியமாகும். அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ இலங்கை விசாரிக்கப்பட வேண்டும்.

அந்தவகையில் இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபையூடாக விசாரிப்பதற்கு இனியாவது உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும்.

வரும் மார்ச்சில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை வலியுறுத்தி எதிர்வரும் 9ஆம் திகதி அன்று மாபெரும் பேரணியை நடத்தவுள்ளோம்.

இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.