புத்தளம்- மன்னார் பழைய வீதி மூடப்பட்டுள்ளது!

223 0

வன்னாத்தவில்லு பழைய எலுவன்குளம் பகுதியிலுள்ள சப்பாத்துப் பாலத்தின் கீழ், திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால்,  புத்தளம் – மன்னார் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக,  வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் சத்துர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பாலத்தின் ஒரு பகுதியில், கலா ஓயாவிலிருந்து வெளியேற்றப்படும் நீரை சேமித்து வைத்து வந்த  நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு காரணமாக, 09ஆம் திகதி முதல்,  சேமித்து வைக்கப்பட்ட நீர் வெளியேறி வருவதாக, பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதனால், எலுவன்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  நீர் சுத்திகரிப்பு நிலையம், விவசாய நிலங்கள் என்பவற்றுக்கு  நீரை  வழங்குவதில்  சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக, வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் சத்துர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எலுவன்குளம் சப்பாத்துப் பாலத்தின் கீழ்  நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால், குறித்த பாலத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், புத்தளம் – மன்னார் பாதை உடனான சகல போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,  மறு அறிவித்தல் வரை,  போக்குவரத்துக்காக மாற்று வழிகளைப்  பயன்படுத்துமாறு,  வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பாலத்தின்  கீழ் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சீர்செய்ய வன்னாத்தவில்லு பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவத்தினர், கடற்படையினர், விவசாயிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், புத்தளம் பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.