காவல்துறை உறுப்பினரை அடித்துக் கொன்ற சந்தேகத்தில் இருவர் கைது

264 0

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அவரின் பண்ணை வீட்டின்  முன்னாள் வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (06) காலை  மீட்கப்பட்டுள்ளதாகவும்  சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக  வவுணதீவு பொலீசார்  தெரிவித்தனர்.

 

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும் மட்டக்களப்பு புதூர் 7 ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை  சிவராசா என்பவரே இவ்வாறு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சம்பவதினமான நேற்று (05) இரவு  வவுணதீவு ஆயித்தியமலை வீதியிலுள்ள 3ம் கம்டை பிரதேசத்தில் தனது பண்ணைக்கு சென்றிருந்த நிலையில் இரவு 11 மணியளவில் பண்ணையில் இருந்து வீதிக்கு வந்தபோது அங்கு இருவர் பதுங்குவதை கண்டு யார் எனவும் கேட்ட போது அவர்கள் இல்லை மது அருந்துவதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது  குறித்த உத்தியோகஸ்தர் இல்லை நீங்கள் மாடு களவு எடுக்க வந்துள்ளீர்களா  எனகேட்ட போது அவர்கள் குறித்த உத்தியோகஸ்தருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டதையடுத்து உத்தியோகஸ்தர் மீது இருவரும் அங்கிருந்த பொல்லால் தலையில் தாக்கியதையடுத்து அவர் வீதியில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் உடலை இழுத்து வீதியின் ஓரத்தில் போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர் என இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும்  ஆயித்தியமலை தேவாலய வீதயைச் சேர்ந்த 31 வயதுடைய முகமட் அஸ்மி, வவுணதீவு நாவற்குடா ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் என்பவர்களின் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் உத்தியோகஸ்தரின் தாக்குதலில் கைது செய்யப்பட்ட முகமட் அஸ்மிக்கு, அடிகாயங்கள் உள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்தனர் .

இதேவேளை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.