நடிகர் விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் அவரை சென்னை அழைத்து வருகின்றனர். அதே நேரம் சென்னையில் உள்ள அவரது இரண்டு வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை எடுத்த ஏஜிஎஸ் நிறுவனம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். அதன் எதிரொலியாக நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் 6 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது.
பின்னர் அவரை தனி விடுதிக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவரை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையைத் தொடங்கினர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் தற்போது வசிக்கும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு அழைத்து வரப்படும் விஜய்யிடம் அவரது வீட்டில் வைத்துக் கைப்பற்றப்படும் ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது