அதிமுக ஊராட்சித் தலைவர் அந்தியூரில் கொலை

299 0

அந்தியூரில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில், போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றுகாலை அந்தியூர் அருகே மூலக்கடை பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் தனது வாகனத்தை பழுது பார்ப்பதற்காக நின்றிருந்தார். அப்போது,அவ்வழியே காரில் வந்த 4 பேர்,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால், ராதாகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே தகவலறிந்து கவுந்தப்பாடி சலங்கபாளையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் அவ்வழியே வேகமாகச் சென்ற காரை மடக்கிப் பிடித்து, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.